காசிம் புலவர்
இஸ்லாமியத் தமிழ்ப் புலவர்களில் இசைத்தமிழ் இலக்கியம் படைத்த பெரும் புலவர் காசிம் புலவர். இவர் கடற்கரைப்பட்டினமான காயல் பட்டினத்தில் பிறந்தவர். இவர் முன்னோர்கள் எகிப்து நாட்டின் தலைநகரமான அல் காஹிரா (கெய்ரோ) மாநகரச் சேர்ந்தவர்கள்.
காசிம் புலவர் இளமையிலேயே இஸ்லாமிய மார்க்க ஞானம் மிக்கவராக விளங்கினார். திருவடிக் கவிராயர் என்பாரிடம் தமிழ் கற்றுப் பெரும் புலமை பெற்றார். இசைஞானம் மிகுந்தவராகவும் இருந்தார்.
ஒருசமயம் இவர் ஆசிரியர் திருவடிக் கவிராயர், அருணகிரியாரின் ‘திருப்புகழ்’ நூலை பெரிதும் பாராட்டினார். இதற்கு இணையான வேறொரு திருப்புகழைப் பாட இனி எவராலும் இயலாது எனக் கூறினார். இதைகேட்ட காசிம் புலவர் “என்னால் பாட முடியும்” என்றார். அவ்வாறாயின் “பாடிக் காட்டு” எனப் பணித்தார் ஆசிரியர் திருவடிக் கவிராயர்.
“பகருமுருவிலி அருவிலி வெருவிலி” எனும் சீரை முதலாகக் கொண்டு 141 பாடல்களைப் பாடி, நூலை விரைவிலேயே நிறைவுச் செய்தார். காசிம் புலவர் ‘திருப்புகழ்’ நூலைப் படித்த ஆசிரியர் திருவடிக் கவிராயர், இவரது தமிழ் அறிவையும், செய்யுள் இயற்றும் திறனையும், இசை ஞானத்தையும் பெரிதும் போற்றினார். இவருக்கு ‘வரகவி’ எனும் பட்டத்தை அளித்துப் பாராட்டினார்.
இவர் ஹிஜ்ரி 1177 துல்கஃதா பிறை 12 வெள்ளி இரவன்று காலமானார். இவரது உடல் காயல்பட்டினத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.
இவர் ஆண்மக்கள் இருவரும் இவரைப் போலவே திறம்பட்ட இஸ்லாமியத் தமிழ்ப்புலவர்களாக விளங்கினர்.
பி.கு.
காசிம் புலவரின் ‘திருப்புகழ் ‘பாடல்களை நாகூர் தர்கா வித்வான் எஸ்.எம்.ஏ.காதர் பாடி இசைத்தட்டுகளாக வெளியிட்டுள்ளார்.
காசிம் புலவரின் திருப்புகழை… அருணகிரிநாதரின் பாடலைப் போல் மூச்சுப் பிடித்துப் பாடுவது குமரி அபுபக்கரின் தனித்திறமை எனக் கூறலாம். (இவர் தூர்தர்ஷனில் செய்தி வாசிக்கும் நஸீமா சிக்கந்தரின் தந்தை.)
கனக கவிராயர்
இவரது இயற்பெயர் செய்கு நெயினார் என்பதாகும். இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராஜகெம்பீரம் எனும் சிற்றூரில் பிறந்தவர். தமிழ்ப்புலமை மிக்கவராகத் திகழ்ந்தார்.
மதுரையிச் சேர்ந்த கொந்தாலகான் என்பவரின் விருப்பத்திற்கேற்ப, நபிகள் நாயகத்தின் அருமைப்பேரர் ஹுசன் (ரலி) அவர்களின் வாழ்க்கை வரலாற்றைக் காப்பியமாகப் பாடினார். ‘கனகாபிஷேக மாலை” (கி.பி.1648) என்ற பெயரில் அமந்த அந்தக் காப்பியமே முதல் இஸ்லாமியத் தமிழ்க் காப்பியம் என்பது குறிப்பிடத்தக்கது.
இக்காப்பிய மாலை 35 படலங்களைக் கொண்டது. 2,792 விருத்தப்பாக்களால் அமைந்தது. இந்தக் காப்பியத்தை புனைந்த காரணத்தால் இவரது இயற்பெயர் நாளடைவில் மறைந்து “கனக கவிராயர்” என்ற பெயரே நிலைபெற்று விட்டது.
இஸ்லாமியத் தமிழ் ஞான இலக்கியத்திற்கு மாபெரும் பங்களிப்பச் செத குணங்குடி மஸ்தான், தொண்டி ஷைகு மஸ்தான் போன்றோர் இவர் வழி வந்த புலவர் பெருமக்களாவர்.
“கனகாபிஷேக மாலை” நூலை பீ. டாக்டர் நசீம்தீன் திறனாய்வுச் செய்து புத்தகம் எழுதியுள்ளார். இதனை உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
அருள்வாக்கி அப்துல் காதிர்
பாட்டாலே விளக்கெரியச் செய்து பாட்டாலே விளக்கை அணையச் செய்தார் ஒரு புலவர். அவர்தான் ஈழத்திருநாடு தந்த பாவலர் அருள்வாக்கி அப்துல் காதிர் புலவர் (1912) . இந்த அற்புதத்தை அவர் கண்டி மாநகரில் பலர் முன்னிலையில் நிகழ்த்திக்காட்டினார்.
இறையருளும் நல்லிசைப்புலமையும் வாய்ந்த புலவர் விளக்கெரியும்படி பாடிய வெண்பா பாடல் வருமாறு;
எரிவாய் விரிந்தெழுந்து எண்ணெய் மேல் தோய்ந்து
கரிவாய் இருள்போகிக் காட்ட – அரியணையின்
தூண்டா விளக்கே! சுடர்விட்டு நீயென்முன்
ஈண்டிங் கெழுந்து எரி.
இவ்வாறு பாட்டால் தீபத்தை எரியச்செய்வது தீப சித்தி என்றழைக்கப்படும். அட்டாவதானம், தசாவதானம், சதாவதானம் என்பவற்றைவிட இது மேலானதாகும். இத்தகைய ஆற்றல்மிக்க புலவர் பாட்டால் எரியச்செய்த விளக்கைப் பாட்டாலே அணைத்தும் காட்டினார். அதற்காக அவர் பாடிய மற்றுமொரு வெண்பாவைப் பார்ப்போம்.
தூண்டா மணிவிளக்கே, துகள்போக்கும் தூயொழியே
காண்டற்கரியதோர் காட்சியே – வேண்டி
எரியவுனை வைத்ததுபோல் எல்லோரும் பார்க்க
அரியணையில் நீ நின்றணை.
இத்தகு ஆற்றல் மிக்க புலவரது சிறப்புக்குத் தெய்வப்புலவர் திருவள்ளுவரின்
நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து
மறைமொழி காட்டி விடும்
எனும் குறளும்
நிறைமொழி மாந்தர் ஆணையிற் கிளந்த
மறைமொழி தானே மந்திரம்
எனும் தொல்காப்பியச் சூத்திரமும் தக்க சான்றாகும் எனலாம். இவ்வாறு அறிஞர் தம் முன்னிலையில் தமது ஆற்றலைக் காட்டிய புலவரின் செயலைக் கண்ணாரக் கண்டுகளித்த பொன்னம்பலக் கவிராயர்
எல்லா அதிசயத்தும் ஈது மிகப்பெரிதாம்
வால்லான்மெய்ஞ் ஞாநியப்துல்ல்காதிர் – பல்லார்முன்
பாட்டால் விளக்கெரித்துப் பாட்டதனாலேயணைத்துக்
காட்டியதோரிக்காட்சி காண்
என்று பாடிப் பரவசமுற்றார்.
புலவர் பாடும் புலவராய் மெய்ஞ்ஞானியாய் விளங்கிய அப்துர்காதிர் கண்டி மாவட்டத்திலுள்ள போப்பிட்டி என்னும் சிற்றூரில் 30 ஆகஸ்ட் 1866 அன்று பிறந்தவர். தந்தையார் ஆ.பி. அல்லாப்பிச்சை ராவுத்தர். தாயார் கவ்வா உம்மா. இளமையில் அரபுப்பள்ளியில் திருக்குர்-ஆனும் தமிழ்ப்பள்ளியில் தமிழும் பயின்ற இவர் கண்டியில் உள்ள ராணி அக்கடமியில் (தற்போது அர்ச் போல்ஸ் கல்லூரி) ஆங்கிலம் கற்றார்.
பின் தமது மூதாதையரின் இடமான திருப்பத்தூருக்குச் சென்று மஹ்மூது முத்துப் பாவாப்புலவரிடம் தமிழ் இலக்கண, இலக்கியங்களைக் கற்றுத்தேர்ந்தார். தனது பதினாறாவது வயதிலே கவியரங்குகளில் கவிமழை பொழியத்தொடங்கினார். அச்சமயம் யாழ்ப்பாணத்தில் நிகழ்ந்த கவியரங்கொன்றில் கவிமழை பொழிந்த இவரது புலமைத்திறனை வியந்தோர் அவ்வரங்கிலேயே இவருக்கு “அருள்வாக்கி” எனப் பட்டம் சூட்டி மகிழ்ந்தனர். அன்றுமுதல் அதே பெயரில் அழைக்கப்படலானார். உண்மையிலே அவர் அருள்வாக்கினராகவே விளங்கினார். பலரது தீராத நோய்களைத் தீர்த்து வைத்தார் எனவும் கூறுவர்.
கவிஞர் த. துரை சிங்கம்
(பைந்தமிழ் வளர்த்த ஈழத்துப் பாவலர்கள் நூலிலிருந்து)