தமிழகத்தில் முஸ்லீம்கள்

10/04/2009 at 9:24 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

அகிலத்திற்கோர் அருட்கொடையாகத் தோன்றிய அண்ணல் நபி (ஸல்) அவர்கள் போதித்த சத்திய சன்மார்க்க இஸ்லாம் அரபு நாட்டில் மட்டுமின்றிக் கடல் வழியாகவும் தரை மார்க்கமாகவும் அகில உலகெங்கிலும் குறிப்பாக தென்கிழக்கு மத்திய கிழக்கு ஆசிய நாடுகளில் வேகமாக வளர்ந்தோங்கி வேரூன்றத் துவங்கியது.

ஆசியாவின் நடுமேட்டு நிலத்திற்குத் தெற்கிலுள்ள பகுதி முழுவதும் சம்புத்தீவு அல்லது நாவலந்தீவு என்று அழைக்கப்பட்டது.  நாவலந்தீவில் விந்தியமலைக்குத் தெற்கிலுள்ள பகுதி தட்சிணாபதம் அல்லது தென்னாடு என்றும் அதன் தென் கோடியில் தமிழர் வாழும் இடம் தமிழகம் (தமிரிக) என்றும் அழைக்கப் பெற்றன.

மிகத் தொடக்க காலத்திலிருந்தே தமிழகத்தின் பொருள் வளங்கள் தொலைதூர நாடுகளின் வணிகர்களின் கவனத்தை கவர்ந்து வந்தன. கி. பி. ஆறாவது நூற்றாண்டின் இறுதி வரை தென்னிந்தியாவின் மேற்குக்கரைக்கும் கிழக்குகரைக்கும் வியாபார நிமித்தம் பயணம் வந்த அரேபியர்களில் சிலைவணக்கக் காரர்கள் கிறிஸ்தவர்கள் ய+தர்கள் போன்றோர்கள் இருந்தனர்.  ஆனால் கி. பி. ஏழாம் நூற்றாண்டின் மத்திக்குள்ளாக அரேபியர்கள் அனைவருமே இஸ்லாத்தில் தீவிர பங்கெடுத்துக்கொண்டிருந்தனர்.

கோவளத்தில் தமிமுல் அன்ஸாரி(ரலி) அவர்களது அடக்கஸ்தலமும் தென்னாற்காடு மாவட்டம் முகம்மது பந்தரில் (பரங்கி பேட்டையில்) ஹஸரத் அபிவக்காஸ்(ரலி) அவர்களது அடக்கஸ்தலமும் இருக்கிறது. இவர்கள் நபிகள் நாயகத்தின் தோழர்கள் (ஸஹாபாக்கள்) என்ற அந்தஸ்தை பெற்றவர்கள்.

ஸஹாபாக்கள் பலரும் சமயப்பிரச்சாரத்திற்காக தங்களை அர்பணித்துக்கொண்டு உலகின் பல பாகங்களுக்கும் பயணித்தனர்.  ஏற்கனவே இந்தியாவோடு இருந்து வந்த வணிகத்தொடர்போடு புதிதாக மார்க்கத் தொடர்பும் சேர்ந்துக்கொன்டது.

சரக்குகளோடும் குதிரைகளோடும் வாணிபத்திற்காக வந்தவர்களும் அவர்களுக்கு ஏவல் புரிய வந்தவர்களும் இங்கேயே தங்கினர். திருமண உறவுகளை கொண்டனர்.  இஸ்லாமிய நெறிமுறைகளை ஏற்றுக்கொண்ட அவர்களது வாழ்வு தமிழகத்தில் தொடர்ந்தது.

கி.பி. 642-ல் மலபார் கரையிலுள்ள முசிறி துறைமுகப்பட்டிணத்தில் (இன்றைய கொடுங்காளுர்;) முதல் பள்ளிவாசல் கட்டப்பட்டது. அதைத்தொடர்ந்து தமிழகக்கரை நெடுகிலும் தொழுகைப் பள்ளிகள் அக்காலக் கட்டத்திலேயே எழுந்தன.

திருச்சி நகரின் நடுவில் மெயின்கார்டு கேட்டின் அருகே கோட்டை ரயில் நிலையம் – சமீபத்தில் பழுதுபட்டுக் காணப்படும் பள்ளிவாயில் கி.பி 738-ல் கட்டப்பட்டது.

இவ்வுண்மையை மனதில் இருத்தியே பாரதப் பிரதமர் பண்டித ஜவஹர்லால் நேரு ”Discovery of India” என்ற தமது நூலில் – ” ஒரு அரசியல் சக்தியாக பாரதத்திற்குள் இஸ்லாம் நுழைவதற்கு சில நூற்றாண்டுகளுக்கு முன்னமேயே இஸ்லாம் ஒரு மார்க்கம் என்ற ஹோதாவில் இந்நாட்டின் தென்பகுதியை அடைந்துவிட்டது” என்று எழுதியுள்ளார்.

”அல்லா என வந்து சந்தியும்
நந்தாவகை தொழும் சீர் நல்லார்”

என்று களவியற் காரிகை அகப்பொருள் இலக்கண நூலில் வருகிறது.

கி.பி எட்டாம் நூற்றாண்டைச் சேர்ந்த தமிழ் இலக்கியங்களில் இஸ்லாம் பேசப்படுவதால் ஏழாவது நூற்றாண்டின் இறுதியிலேயே தமிழகத்தில் இஸ்லாமிய சமுதாயத்தினரின் வாழ்வு துவங்கப்பட்டுவிட்டதை உறுதி செய்கிறது.

மார்க்க மேதைகள்

சேர நாட்டு மன்னர் பாஸ்கர ரவிவர்மன் என்ற சேரமான் பெருமாள் நாயனார் (கி.பி. 780-834) சந்திரன் இரண்டாகப் பிளப்பது போன்று கனவு கண்டார். இதன் விளக்கத்தை அவர் அரபு வணிகர்களிடம்  கேட்டார். அதற்கு அவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) இறைவனின் அருளால் சந்திரனை இரண்டாக பிளந்து நிகழ்த்திய அற்புதத்தை விளக்கினர். இதனால் திருப்தியடைந்த மன்னர் இஸ்லாத்தை பற்றி மேலும் முழுமையாக தெரிந்துக் கொண்டு முஸ்லிமாக மாறினார்.  தனது பெயரை அப்துர் ரகுமான் சாமிரி என மாற்றிக் கொண்டார்.

ஹஜ் கடமையை நிறைவேற்ற அரேபியா சென்ற அவர் அங்கேயே மரணமடைந்தார்.  அன்னார் அரேபியாவில் இருந்தபோது அவரது வேண்டுகோளுக்கு இணங்க மாலிக் இப்னு தீனார் தலைமையில் இஸ்லாமிய பிரச்சாரக்குழு ஒன்று தென்னிந்தியா வந்து தீன் பணியில் ஈடுபட்டது.

நத்தர்ஷாஹ் ஒலியுல்லாஹ் (கி.பி. 969 – 1039) சிரியாவை சேர்ந்தவர்கள்.  செய்யது வம்சத்தை சேர்ந்த இவர்கள் மார்க்கச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இறுதியில் திருச்சி வந்தடைந்தார்.  சுமார் 700 பிரச்சாரர்களை (கலந்தர்கள்) உருவாக்கி தமிழகத்தில் தீன் பணியை சிறப்பாகச் செய்தார்.

தென் மாவட்டங்களில் பாபா பக்ருத்தீன் என்ற காட்டு பாவா சாகிப் அவர்களும் மதுரையில் ஹஸரத் அலியார்ஷாஹ் ஸாஹிப் அவர்களும் இஸ்லாமியப் பணியினை இன்முகத்துடன் செய்து கொண்டிருந்தனர். இப்பெரியார்கள் ஏராளமான மக்கள் இஸ்லாத்தில் இணைவதற்கு காரணமாக இருந்தனர்.

இறை நேசச் செல்வர் சையித் இப்ராஹிம் மொரோக்கோவில் தோன்றி பின் இஸ்லாத்தை பரப்புவதற்காக (கி.பி. 1142 – 1207) இந்தியா வந்தார். பாண்டிய மன்னர் குலசேகரன் சார்பாக மற்றுமொரு பாண்டிய மன்னர் விக்கிரமனுடன் போரில் ஈடுபட்டார். இப்போரின் விளைவாக அரசாட்சி சையித் இப்ராஹிம் அவர்கள் கையில் வந்தது.  தமிழ் நாட்டின் ஒரு பகுதியை அரசாண்ட முதல் முஸ்லிம் மன்னர் (கி.பி. 1195-1207) இவர்களே.

கி.பி. 1207-ல் வீரபாண்டியனுடன் நடந்த மற்றுமொரு போரில் ~ஹீதானார்கள். இராமனாதபுரம் ஏர்வாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.  (மதினா நகரின் ஒரு பகுதியான ”யர்புத” என்ற இடத்திலிருந்து அவர்கள் புறப்பட்டு வந்ததால் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கும் ”யர்புத்” என்றே பெயர் சூட்டப்பட்டது.  இச்சொல் நாளடைவில் ஏர்வாடி என்று மருவி விட்டது.)

பதினாறாம் நூற்றாண்டில் நாகூர் சாகுல் ஹமீது ஒலி அவர்கள் பெருமைக்குரியப் பணியினை ஆற்றினார்கள். கல்வத்து நாயகம் அவர்களும், செய்யது முகம்மது ஆலிம் புலவர் அவர்களும் சிறப்பான பணியினை ஆற்றினார்கள். செய்கு அப்துல்காதிர் மரைக்காயர் என்று குறிப்பிடும் வள்ளல் சீதக்காதி அவர்களின் நண்பரும் கீழக்கரையில் வாழ்ந்தவருமான சேக் சதக்கத்துல்லா அப்பா அவர்களிடம் கி.பி. 1622-ல் 4000 பேர்கள் கலிமாச் சொல்லி இஸ்லாத்தை ஏற்றுக்கொண்டனர்.

சமுதாய அந்தஸ்து

அரபு நாட்டு வியாபாரிகள் சோனகர் என்று அழைக்கப்பட்டனர். (இலங்கை தமிழ் முஸ்லிம்கள் இன்றும் சோனகர் என்றே அழைக்கப்படுகிறார்கள்.)

”மார்க்கப்”; என்பது கப்பலைக் குறிக்கும் அரபுச் சொல். கப்பல் அல்லது மரக்கலத்தில் வந்தவர்கள் மரக்கலராயர் என்றாகி பின் மரைக்காயர் ஆனார்கள்.

இஸ்லாமிய பணியில் ஈடுபட்டோர் ”லப்பைக்” என்ற அரபிச் சொல்லை பயன்படுத்திட அதுவே ”லப்பை” என்றானது.

குதிரை வணிகத்திற்காக வந்தவர்கள் குதிரையை அடக்கியாளும் ஆற்றலுடையவர்கள் என்ற பொருளில் ராவுத்தர் ஆனார்கள்.

ராவுத்தர் என்ற சொல் மரியாதைக்குரியதாக மதிப்புடையாதாக தமிழ் மக்களால் பாவிக்கப் பட்டது. தங்களது கடவுள்களுடைய கோலத்தையே ராவுத்தர் கோலத்தில் கற்பனை செய்து மகிழ்ந்திருக்கிறார்கள் தமிழர்கள். முருகக் கடவுளையே ”சூர்க் கொன்ற ராவுத்தனே” ”மாமயிலேறும் ராவுத்தனே” என அருணகிரிநாதர் இயற்றிய கந்தர் அலங்காரமும் கந்தர் கவிவெண்பாவும் வருணிக்கின்றன.

”அப்துல் ரகுமான் என்ற அரபியர் பாண்டிய மன்னனின் அரண்மனையில் பெரியதோர் அதிகாரம் வகித்திருந்ததாகவும், காயல் துறைமுகத்தில் சுங்கம் வசூலித்தாகவும், ஞா. துறைசாமிப்பிள்ளை அவர்கள் ”பாண்டியர் காலம்” என்ற சொற்பொழிவுல் குறிப்பிட்டுள்ளார்கள்.

கி.பி 1276-ல் சடையவர்மன் சுந்தரபாண்டியன் அரபு நாட்டின் கைஸ் மன்னரான மலிகுல் இஸ்லாம் ஜலாலுத்தீன் அவாகளோடு நெருங்கிய நட்புறவு கொண்டிருந்தார் என வரலாற்று ஆசிரியர் வஸ்ஸாப் கூறுகிறார்.

கி.பி 1280-ல் குலசேகரப் பாண்டியன் ஜமாலுத்தீன் என்ற தூதுவரைச் சீன நாட்டிற்கு அனுப்பினார்.

ஜமாலுத்தீன் சகோதரர் தகியுத்தீன் அப்துல் ரகுமான் கி.பி. 1303 வரை அமைச்சராகவும் வரி வசூலிக்கும் அதிகாரியாகவும் பண்யாற்றினார். தொடர்ந்து சிராஜூத்தீனும் அவரது பேரனார் நிஜாமுத்தீனும் பதவியில் இருந்ததை கிருஷ்ணசாமி அய்யங்கார் தெரிவிக்கிறார்.

பாண்டிய மன்னர்களின் ஆலோசர்களாக அமைச்சர்களாக கடற்படைத் தளபதிகளாக முஸ்லிம்கள் பொறுப்பு வகித்திருக்கிறார்கள். இந்நாட்டு மன்னர்களின் தூதுவர்களாக பல வெளிநாடுகளுக்கும் சிலர் சென்று வந்துள்ளனர். அரசாங்க வருவாயை பெருக்கும் வணிகர்களாகவும் போர் வீரர்களாகவும் செயலாற்றி வந்தார்கள்.

மாலிக்காபூர் மதுரை மீது படையெடுத்து வந்த போது பாண்டிய மன்னனின் படையில் இருபதினாயிரம் முஸ்லிம்கள் சேவையாற்றி வந்தனர் என இப்னு பதூதா என்ற யாத்ரிகரின் குறிப்பிலிருந்து அறிந்து கொள்ள முடிகிறது.

கி.பி. ஏழாவது நூற்றாண்டிற்குப் பிறகு தென்னிந்திய மக்கள் வெளிநாட்டுத் தொடர்புகள் மூலமாக என்னென்ன நன்மைகளையும் லாபங்களையும் பெற்றார்களோ அவை அனைத்தும் அப்பகுதியில் வாழ்ந்த முஸ்லிம்கள் மூலமாகவே வந்தடைந்தன என்று கொள்ளலாம் என டாக்டர் தாராசந்த் பெருமிதத்துடன் குறிப்பிடுகிறார்.

டில்லி மன்னர்களின் படையெடுப்பு

13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் கில்ஜி வம்ச ஆட்சி காலத்தில் அலாவுத்தீன் முதன் முதலாக தென்னகத்தில் படையெடுத்தார். முதல் மாறவர்மன் காலத்தில் மாலிக்காபூர் படையெடுத்தார். சுந்தரபாண்டியன் காலத்தில் குஸ்ருகான் படையெடுத்தார். கி.பி. 1323-ல் பராக்கிரமதேவபாண்டியன் காலத்தில் உலூகான் படையெடுத்து பாண்டிய நாட்டை கைப்பற்றினார்.

1323 முதல் 1378 வரை சுமார் 55 ஆண்டுகள் மதுரைப் பகுதியில் சுல்தான்களின் ஆட்சி நடைபெற்றது. நாயக்கர் வம்ச இரண்டாம் ஹரிஹரர்(1376-1404) காலத்தில் மதுரை சுல்தான்கள் ஆட்சி முடிவுக்கு வந்தது என்று அ.கி. பரந்தாமனார் ”மதுரை நாயக்கர் வரலாறு” என்ற நூலில் கூறுகிறார்.

ஆட்சி பொறுப்பில் இருந்த முஸ்லிம் மன்னர்கள் இஸ்லாமியப் பிரச்சாரத்திற்காக எதுவும் செய்ததாக எந்தவிதமான தடையங்களையும் யாரும் கண்டுபிடுத்துச் சொல்லவில்லை. இந்த சுல்தான்கள் ஆட்சிக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே மதுரையிலும் தமிழ் நாட்டின் இதர பகுதிகளிலும் முஸ்லிம் பொதுமக்கள் வாழ்ந்து தான் வந்தார்கள்.

இஸ்லாமிய மார்க்க அறிவு பெற்ற பெரியார்களாலும் ஒலிமார்களாலும் மக்கள் மத்தியில் இஸ்லாம் அறிமுகமாகி பரவியதே தவிர ஆட்சி பொறுப்பில் இருந்தவர்கள் மூலமாக பரவ வில்லை.

இஸ்லாமியரின் ஆட்சி அதிகாரங்கள் தமிழகத்தில் இல்லாத காலங்களிpலும் ”ஒன்றே குலம் ஒருவனே தேவன்’, ‘ ”யாதும் ஊரே யாவரும் கேளிர்”  போன்ற தமிழர் தத்துவங்கள் இஸ்லாமிய கலாச்சாரத்திற்கும் பொதுவாக இருந்தமையால் தமிழகம் அன்போடு இஸ்லாத்தை அணைத்துக்கொண்டது. அல்லாஹ் என்றால் எல்லாம் மறந்திடும் இறை நேசச் செல்வர்கள் மூலம் இஸ்லாம் மார்க்கம் இன்பத் தழிழகத்தில் வேகமாக வளர்ந்தது.

தொகுப்பு: பீர் முஹம்மது.
ஆதாரம் : விடுதலைப் போரில் தமிழக முஸ்லிம்கள் – செ.திவான்.
தமிழகத்தில் இஸ்லாமியர் வரலாறு – ஏ.கே. ரிபாயி.

Permalink Leave a Comment

தமிழகத்தில் இஸ்லாமியர்

10/04/2009 at 8:53 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

ஈரான் இஸ்லாமிய குடியரசின் குர்ஆன் செய்தி ஸ்தாபனம் (இக்னா) தனது செய்தியில் அறிவிப்பதாவது:

அரேபிய தாயகத்தில் வேரூன்றியிருந்த மடமைகளை மாய்த்து மாபெரும் மறுமலர்ச்சியை உருவாக்கிய இனியமார்க்கம் இஸ்லாம், கி.பி. ஏழாம் நூற்றாண்டில்தான் நம் தமிழகத்தில் தம் பொற்பாதங்களை மெல்லப் பதிக்கத் துவங்கியது.

சங்க காலம் முதல் தமிழகத்துடன் வணிகத் தொடர்புகளைக் கொண்டிருந்தனர் அரபு நாட்டவர். தொடக்கத்தில் யவனர் என்றழைக்கப்பட்டனர். பின்னர் இப்பெயர் மாறி முஸ்லிம்கள் என்றும், சோனகர், துலுக்கர் என்றும் அழைக்கப்பட்டனர். அவர்களது சிந்தனைகள், செயல்பாடுகள், வணக்க வழிபாடுகள் ஆகியவை தமிழ் மக்களைக் கவர்ந்தன. இனிய பேச்சும் இயல்பான வணிகத் தொடர்பும், சாதாரண மக்களை மட்டுமல்லாமல் சோழ – பாண்டிய மன்னர்களையும் கவர்ந்தன. இறைவன் ஒருவனே என நம்புதல், நாளொன்றுக்கு ஐந்து முறை இறைவனுக்கு வணக்கம் செலுத்துதல், ஆண்டுக்கு ஒரு திங்கள் உலக நலன் கருதி உண்ணா நோன்பிருத்தல், சாதி சமய பேதமின்றி அனைத்து மக்களையும் சகோதரர்களாகப் பாவித்து அன்பு செலுத்துதல் ஆகிய புதிய கோட்பாடுகள் தமிழக மக்களிடையே ஒரு புதிய சிந்தனையை ஏற்படுத்தின.

மதுரையம்பதியில் நின்றசீர் நெடுமாறன் என வழங்கப்பட்ட கூன் பாண்டியன், அரபு நாட்டு வணிகர்களுக்கு ஆதரவு வழங்கினான். மதுரையில் அவர்களது குடியிருப்பு அமைவதற்கு உதவினான். இதே போன்று சோழ நாட்டின் தலைநகரான உறையூரிலும் முஸ்லிம் வணிகர்கள் தங்குவதற்கு சோழ மன்னன் உதவினான். அவர்களது வழிபாட்டுத் தலம் ஒன்று உறையூரில் அமைவதற்கும் ஆதரவு நல்கினான். அந்தப் பள்ளிவாசல் (கி.பி.726) திருச்சி கோட்டை ரயில் நிலையத்திற்கு அருகில் இன்றும் இருக்கிறது.

இத்தகைய இஸ்லாமிய அரபு வணிகர்களது குடியிருப்புகள் சோழ நாட்டிலும், பாண்டிய நாட்டிலும் பல பகுதிகளில் எழுந்தன. அவை, அஞ்சுவண்ணம் என மக்களால் அழைக்கப்பட்டன. இந்த அஞ்சுவண்ணம் ஒன்று நாகப்பட்டினத்துக்கு அருகில் அமைந்திருந்ததை தனிப் பாடல் ஒன்றின் மூலம் தெரிந்துக்கொள்ள முடிகிறது.

பாண்டிய நாட்டின் தென்பகுதியான நாஞ்சில் நாட்டில் திருவிதாங்கோடு அருகில் அஞ்சுவண்ணம் என்ற பெயரிலேயே ஒரு சிற்றூர் இன்றும் நிலைத்திருக்கிறது. இந்தக் குடியிருப்புகளில் வாழ்ந்து வந்த அராபிய இஸ்லாமியர், நாளடைவில் வணிகத்துடன் மட்டுமல்லாமல் சமுதாய நிலைகளிலும் தங்களைத் தொடர்பு படுத்திக்கொண்டு கலந்து தமிழ் முஸ்லிம்கள் என்ற புதிய பெயரினைப் பெற்றனர்.

வாணிபத்திற்கு அவர்கள் பயன்படுத்திய வாய்மொழியான தமிழ், இப்போது அவர்தம் வழித்தோன்றல்களின் தாய் மொழியாக மாறியது. அதுவரை சோழ – பாண்டிய மன்னர்களால் மெய்க்கீர்த்திகளிலும், கல்வெட்டுகளிலும், சோனகர் – துலக்கர் எனக் குறிப்பிடப்பட்ட இந்த மேலைநாட்டு முஸ்லிம்கள், தமிழ் முஸ்லிம்கள் என்ற தகுதியையும், அரசியல் முதன்மையையும் எய்தினர்.

இந்தப் புதிய தமிழ்ச் சமுதாயத்தினரது அணிகலன்களும், ஆடைகளும், உணவு முறைகளும் தமிழ் மக்களிடையே பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. நாளடைவில் இந்தக் குடியிருப்புகளிலும், வணக்கத் தலங்களிலும் அமைக்கப்பட்ட கட்டுமானங்கள், குறிப்பாக மேற்கூரைகள், கும்ப அமைப்பில் அமைக்கப்பட்ட அலங்கார கோபுரங்கள், சாளரங்கள், முகப்பில் பயன்படுத்தப்பட்ட வில் வடிவ குதிரைக் குளம்பு அமைப்பு வளைவுகள் ஆகியவை திராவிட – இஸ்லாமிய கட்டுமானங்கள் என்ற புதிய பாணியை ஏற்படுத்தின.

தமிழகத்தில் ஏற்கனவே தழைத்து வளர்ந்து வந்த சைவம், வைணவம், சமணம், பௌத்தம் ஆகிய சமயங்கள் போன்று இஸ்லாமும் தமிழகத்தில் சமயங்களில் ஒன்றாக நிலைபெற்றது. தமிழ் சமுதாயத்தில் தவிர்க்க முடியாத அங்கமாக தமிழ் முஸ்லிம்கள் அங்கீகரிக்கப்பட்டனர். இத்தகைய சமய நிலையும், நோக்கும் ஏற்படுவதற்கு, அன்று அரபகத்திலிருந்து தமிழகம் வந்த இஸ்லாமிய ஞானிகளே பெரிதும் உதவினர். இவர்கள் தங்களது அரிய வாழ்வினைத் தமிழ் மக்களின் சமூக ஒற்றுமைக்கும் முன்னேற்றத்திற்கும் அர்ப்பணித்து வந்தனர்.

தமிழ் மக்களால் பெரிதும் போற்றப்பட்டு வந்த தமிழ்நாட்டு பதினெண் சித்தர்களைப் போன்று இந்த இஸ்லாமிய ஞானிகளின் ஆன்மீக உபதேசங்களும் தமிழ் மக்களால் மனமுவந்து ஏற்கப்பட்டன. இந்தப் பதினெண் சித்தர்களில் ஒருவரான சதுரகிரி மலையைச் சேர்ந்த இராமதேவர் இஸ்லாத்தை ஏற்று, புனித மக்கா சென்று திரும்பினார். தமது பெயரையும் யஃகூபு சித்தர் என மாற்றி அமைத்துக் கொண்டார்.

கி.பி. 10-ஆம் நூற்றாண்டில் சிரியா நாட்டிலிருந்து தமிழகம் வந்த இறைநேசர் நத்ஹர், காலமெல்லாம் திருச்சிப் பகுதி மக்களது ஆன்மீக வழிகாட்டியாக வாழ்ந்து, திருச்சியிலேயே இயற்கை எய்தினார். இவர்களை அடுத்து கி.பி. 12-ஆம் நூற்றாண்டில் அரபுநாட்டு மதீனா நகரிலிருந்து தென்பாண்டிய நாட்டிற்கு வந்த இறைநேசர் செய்யிது இபுறாஹீம், 12 ஆண்டுகளுக்கு மேலாகப் பாண்டிய நாட்டு மக்களது ஆன்மீக வழிகாட்டியாக அரிய உபதேசங்களைச் செய்து சேதுநாட்டு ஏர்வாடியில் கி.பி. 1195-ல் புகழுடம்பு பெற்றார்.

தமிழ் முஸ்லிம்கள் சிலர் அரசியலில் முதன்மையும், செல்வாக்கும் பெற்றிருந்தனர். சோனகன் சாவூர் என்பவர் ராஜராஜ சோழனது அவையில் சிறப்பிடம் பெற்று இருந்ததுடன் தஞ்சைக் கோயிலுக்குப் பல தானங்கள் வழங்கி இருப்பதைக் கோவில் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. இந்த வணிகர், ராஜேந்திர சோழனது அவையிலும் இடம் பெற்றிருந்தார். கந்தர்வ பேரரையன் என்ற சிறப்பு விருதினையும் அந்த வணிகருக்கு ராஜேந்திர சோழன் வழங்கிச் சிறப்பித்ததை அவனது கோலார் கல்வெட்டுகள் தெரிவிக்கின்றன. மேலும் இந்த மன்னனின் சிறந்த அலுவலராக துருக்கன் அஹ்மது என்பவர் விளங்கியதை லெய்டன் செப்பேடுகள் தெரிவிக்கின்றன.

இதுபோலவே கி.பி. 13-ஆம் நூற்றாண்டின் இறுதியில் காயல்பட்டினத்தில் மாறவர்மன் குணசேகர பாண்டியனது அரசவையில் இருபெரும் முஸ்லிம் வணிகர்கள் மிகுந்த செல்வாக்குப் பெற்றிருந்தனர். அவர்களில் ஒருவரான ஷேக் ஜக்கியுத்தீன், பாண்டியனது தலைமை அமைச்சராக இருந்தார். இன்னொருவரான ஷேக் ஜமாலுத்தீன், பாண்டிய மன்னனின் அரசியல் தூதுவராக சீன நாட்டுக்குப் பலமுறை சென்று வந்ததையும் வரலாற்றில் காணமுடிகிறது. 17-ஆம் நூற்றாண்டில் மிகச் சிறப்புடன் அரசோச்சிய சேது மன்னர் ரெகுநாத கிழவன் சேதுபதியின் நல்லமைச்சராக வள்ளல் சீதக்காதி என்ற ஷேக் அப்துல் காதர் மரைக்காயர் விளங்கினார். டச்சுக் கிழக்கிந்திய ஆவணங்கள் இதைத் தெரிவிக்கின்றன. இவ்விதம் அரசியலில் தமிழ் முஸ்லிம்கள் முதன்மை பெற்றிருந்ததையும், அதன் காரணமாக சோழ, பாண்டிய மன்னர்கள் மட்டுமல்லாமல், மறவர் சீமை சேதுபதிகள், மதுரை நாயக்க மன்னர்கள், தஞ்சாவூர் நாயக்க – மராட்டிய மன்னர்கள் ஆகியோரது ஊக்குவிப்புகளுக்கும் தமிழ் முஸ்லிம்கள் உரியவர்களாக விளங்கியதைப் பல வரலாற்றுச் சான்றுகள் எடுத்துக் காட்டுகின்றன.

இங்ஙனம் தமிழ்ச் சமுதாயத்தின் தனிப்பெரும் சிறுபான்மையினராக விளங்கிய தமிழ் முஸ்லிம்கள், தங்களது தாய்மொழியாகக் கொண்ட தமிழுக்கு ஆற்றியுள்ள தொண்டுகளும் அளப்பரியவை. கி.பி. 15-ஆம் நூற்றாண்டு முதல் 18-ஆம் நூற்றாண்டின் தொடக்கம் வரை தமிழகத்தின் ஆட்சியாளராக விளங்கிய நாயக்க மன்னர்களும், தஞ்சை மராட்டியர்களும் தமிழைப் புரக்கணித்து அவர்களது தாய்மொழியான தெலுங்கையும், மராட்டிய மொழியையும் வளர்ச்சி பெறச் செய்ததால் தமிழ்ப் புலவர்கள் அடைந்த வேதனையும் வறுமையும் பலப்பல. இத்தகைய இறுக்கமான சூழ்நிலையில் தமிழ் மொழியில் தேர்ந்து, பல புதிய இலக்கியப் படைப்புகளை முஸ்லிம்கள் யாத்து மகிழ்ந்தனர்.

தமிழ் முஸ்லிம்களது முதல் இலக்கியமான ஆயிரம் மசாலா என்ற அதிசயப் புராணம், 1572-ல் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் அரங்கேறியது. இதைத் தொடர்ந்து தமிழ் யாப்பு இலக்கண வழியிலான புராணம், கோவை, கலம்பகம், அந்தாதி, பிள்ளைத்தமிழ், திருப்புகழ், குறவஞ்சி, பள்ளு என இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் இலக்கியங்கள், தமிழ் முஸ்லிம்களால் படைக்கப்பட்டு, தமிழின் வளமைக்கும் பெருமைக்கும் அணி சேர்த்துள்ளன. குறிப்பாக தக்கலை பீர் முஹம்மது அப்பா, கோட்டாறு ஞானியார் சாஹிபு, காயல் காசிம் புலவர், குணங்குடி மஸ்தான் சாஹிபு, தொண்டி மோனகுரு மஸ்தான், அருள்வாக்கி அப்துல் காதர் புலவர் ஆகியோரது இன்னிசைப் பாடல்களும், இராமநாதபுரம் வெ. இபுறாஹீம் சாஹிபு போன்றவர்களின் நாடக நூல்களும் பெருமைமிகு பட்டியலில் இடம் பெற்றவையாகும். இந்தப் படைப்புகளுடன் அரபு, பார்சி, உருது ஆகிய மொழிப் புலன்களிலிருந்து பெற்ற தங்களது புலமைத் திறனை அந்த மொழிகளின் வடிவங்களான நாமா, கிஷ்ஷா, முனாஜாத் என்ற புதிய இலக்கிய வடிவங்களையும் தமிழ் மொழியில் புகுத்தி உள்ளனர். இதன் காரணமாக அந்த மொழிகளின் சொற்கள், ஏராளமான எண்ணிக்கையில் தமிழ் வழக்கில் திசைச் சொற்களாகக் கலந்து தமிழின் வளமைக்கு ஊட்டமளித்தன. அத்துடன் வளர்ந்து வரும் மொழிக்கு உதவும் வகையில் இந்த இலக்கிய வடிவங்களும் இன்னும் பல புதிய இலக்கிய வடிவங்களும் முன்னோடியாக விளங்கி வருகின்றன.

.

Permalink Leave a Comment

முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்கள்

07/02/2009 at 9:11 pm (முத்தமிழ் வளர்ச்சியில்)

‘தமிழுணர்ச்சியும் முஸ்லிம்களும்’ என்ற திராவிடத் தமிழர்களின் பதிவில் காயிதே மில்லத் இஸ்மாயில் சாகிப் மற்றும் ஜனாதிபதி அப்துல் கலாம் ஆகியோரின் தமிழ்பற்று மட்டுமே பிரதானப்படுத்தப்பட்டு பெரும்பாலான தமிழ் முஸ்லிம்கள், தமிழைப்  புறக்கணிக்கிறார்கள் என்ற தொனியில் கருத்துக்கள் இருந்தன.

அரேபியாவிலிருந்து சர்வ தேசங்களுக்கும் பரவிய இஸ்லாம் அதன் மூலமொழியாகிய அரபியை மட்டும் சார்ந்து வளரவில்லை.  உலகலாவிய மார்க்கத்தைப் பேணும் சமூகத்தவரை ஒரு மொழிக்குள் அடக்கிப் பார்ப்பதில் நியாயமில்லை. எனினும் தமிழ் மொழி பேசும் முஸ்லிம்கள் தமிழுக்காற்றிய பங்களிப்புகளை அறிந்து கொள்வது தமிழ் கூறும் நல்லுலகிற்கு அவசியமாகிறது.

இத்தொடரில் குறிப்பிடப்படும் முஸ்லிம் தமிழ் பண்டிதர்களும் புலவர்களும் சிலசமயம் இஸ்லாமிய அடிப்படை நெறிகளிலிருந்து விலகி தமிழூழியம் புரிந்துள்ளனர்.  அவர்களின் அனைத்து படைப்பிலக்கியங்களிலும் எமக்கு உடன்பாடு இல்லாவிடினும்,  தாய்த் தமிழுக்கு அவர்கள் ஆற்றிய சேவைகளைக் குறிப்பிட வேண்டியது காலத்தின் கட்டாயமாகும்.

கடந்த சில நூற்றாண்டுகள் வரையில் பேரறிஞர்களின் அறிவுத் தேடல்களுக்குத் தலைநகராய் விளங்கிய இராக், சிலுவைப் போர்களால் சின்னாபின்னப்பட்டபோது, பாக்தாத் நூலகங்களிலிருந்த அரிய புத்தகங்கள் தீயிலிட்டுச் சாம்பலாக்கி யூப்ரடிஸ்-டைக்கிரிஸ் நதிகளில் வீசப்பட்டதால் நதிநீர் கருப்பு நிறத்தில் ஓடியதாக வரலாற்றின் மூலம் அறிகிறோம்.

ஐரோப்பிய வரலாற்றின் இருண்டகாலங்கள் (Dark ages of Europe) என்று சொல்லப்படும் கி.பி . பத்து முதல் பதினான்காம் நூற்றாண்டுகளில் ஸ்பெயின் கல்வியில் சிறந்து விளங்கியது. வான் நட்சத்திரங்களுக்கு பெயரிட்டது முதல் விண்ணிலும் மண்ணிலும் அவர்கள் சாதனையாளர்களாகத் திகழ்வதற்கு இஸ்லாம் எந்தவகையிலும் தடையாக இருக்கவில்லை .

முஸ்லிம்களின் ஐம்பெருங் கடமைகளுக்கு அடுத்தபடியாகக் கல்வி கற்பதை ஆணுக்கும் பெண்ணுக்கும் கடமையென்று வலியுறுத்திய மதம், உலகில் இஸ்லாத்தைத் தவிர ஏதேனும் உண்டா என்று தெரியவில்லை. இப்படி கல்வியோடும் நூல்களோடும் தொடர்புடைய முஸ்லிம்கள், தேனினுமினிய தமிழுக்குச் செய்ததை உலகமறியச் செய்திடும் ஒரு சிறு முயற்சியே இப்பதிவு .

இயல்-இசை-நாடகம் என்று முத்தமிழ் அறியப்படுகிறது. மதி மயங்கி, இறைவனை மறக்கச் செய்யும் இசையையும், இச்சையைத்தூண்டும் விதமாக ஆணும்- பெண்ணும் ஆபாசமாக ஆடிப்பாடுவதையும் இஸ்லாம் தடுக்கிறது. இந்த இரண்டிற்கும் வழிவகுக்கும் இசை-நாடகம் தவிர்த்து, தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு மிகக்குறைவு என்பது தமிழ் முஸ்லிம் இலக்கியங்களை அறியாதோரின் கூற்றாகும்.  விகிதாச்சார அடிப்படையில் வேண்டுமானால் ஓரளவு குறைவு என்பதை ஒப்புக் கொள்ளலாம்.

மேலும் இவ்விகிதாச்சாரம் குறைந்ததற்கு தமிழிலக்கியங்களை நாளடைவில் இந்து மயமாக்கியதும் ஒரு காரணம். உதாரணமாக கற்பின் மேன்மையை சொல்லும் சிலப்பதிகார நாயகி கண்ணகி தெய்வமாக்கப்பட்டுள்ளதைச் சொல்லலாம்.

கவிதைக்குப் பொய்யழகு என்பதில் ஓரளவு உண்மையுள்ளதால் பொய்யான வர்ணனைகளைச் சொல்லி அளவுக்கதிகமாக மனிதர்களையோ அல்லது படைப்பினங்களையோ புகழ்வதை இஸ்லாம் ஊக்குவிக்கவில்லை.

சங்கத் தமிழ் மன்னர்களின் அவையை அலங்கரித்தப் புலவர்கள் தகுதி இல்லாத மன்னர்களையும் பொய்யாக வர்ணித்துப் பொற்கிழி பெற்றுச் சென்றனர். ஒருவரை அளவுக்கு அதிகமாகப் புகழ்வதை இஸ்லாம் அனுமதிக்கவில்லை என்பது தெரிந்திருந்தும் முஸ்லிம் இலக்கியவாதிகள் தாம் சார்ந்த நெறிக்கு அளிக்காத முக்கியத்துவத்தைத் தமிழுக்கு அளித்திருக்கின்றனர் என்றால் மிகையாகாது.

அந்தக் காலத்து உமறுப் புலவர் முதல் இந்தக் காலத்துக் ‘கவிக்கோ’ வரை தேடத்தேட முஸ்லிம் இலக்கியவாதிகள் வெளிவருகின்றனர். முத்தமிழ் வளர்ச்சியில் முஸ்லிம்களின் பங்களிப்பு தொடரும்….

courtesy :http://athusari.blogspot.com/2006/07/1.html

Permalink Leave a Comment